இன்றைய தினம் வடக்கு மக்களுடன் தைப்பொங்கல் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு மக்களை சந்திப்பதட்கு இரண்டு நாள் உத்தியோகாபூர்வ பயணத்தை மேட்கொண்டுள்ளார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் வடக்கின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், மக்களை நேரடியாக சந்தித்து பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.மற்றும் இன்று துறையூர் ஐயனார் தேவஸ்தான மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற இருக்கும் தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி சிறப்பு அதிதியாக கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வை மீண்டும் எழுப்பும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, அரசாங்கத்தின் மனிதநேய அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. அதேநேரம், இன்று காலை 10.00 மணிக்கு மன்னார் கொன்னையன் குடியிருப்பு காற்றாலைத் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன் பின்னர் மதியம் 12.00 மணிக்கு மன்னார் சவுத் பார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழியாக நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் அமைகின்றன.வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழா, வடக்கின் பண்பாட்டுச் சிறப்பையும் சுற்றுலா வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும்.
நாளை (16) வெள்ளிக்கிழமை, தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக அரசாங்கம் இந்த வருடத்தில் நிர்மாணிக்கவுள்ள 31,318 வீடுகளின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்தில் முற்பகல் நடைபெறும் இந்த நிகழ்வு, தமக்கான இடம் -அழகிய வாழ்க்கை என்ற அரசாங்கத்தின் கொள்கை நோக்கை நடைமுறைப்படுத்தும் முக்கிய கட்டமாகும். இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றும் இந்த நிகழ்வில், பயனாளிகளுக்கு நிவாரண காசோலைகளும் கையளிக்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் வடக்கு மாகாண நிகழ்ச்சித்திட்டம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. சமூகத்தை பாதுகாக்கும் அரசாங்கத்தின் உறுதியை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு மக்களுடன் உரையாடவுள்ளார்.