தோப்பூர் வாராந்த சந்தையில் சுகாதார மீறல்கள் பயன்பாட்டுக்கு ஒவ்வாத மரக்கறிகள் கைப்பற்றல்
தோப்பூர் வாராந்த சந்தையில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையின் போது, சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில மரக்கறிகள் சுகாதார தரநிலைகளுக்கு உட்படாத நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, இந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் உள்ளிட்ட சில மரக்கறிகள் அழுகிய நிலையிலும், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற நிலையிலும் இருந்ததாக கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தாக அமையக்கூடியதாக கருதப்பட்ட அந்த மரக்கறிகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட மரக்கறிகளை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நூர் முகம்மது கசாலி அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறி மரக்கறிகளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதார மீறல்கள் இடம்பெறாத வகையில் சந்தைகளில் கடுமையான கண்காணிப்புகள் தொடரும் என்றும், பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு அனைவரின் கூட்டு பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த பரிசோதனை நடவடிக்கையில் தோப்பூர் பிராந்திய சுகாதார பரிசோதகர் எம். எஸ். அபாப் அஹமட், மூதூர் உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி அஸ்ரா, மற்றும் தோப்பூர் உப அலுவலக அதிகாரி ஆர். ஐ. ஆஷிக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.