ஜனாதிபதி நிதியம் தொடர்பில் புதிய சர்ச்சை-வெளிவந்த ஆவணங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் வைத்தியசாலைச் செலவுகளுக்காக 10 இலட்சம் ரூபா ஜனாதிபதி நிதியத்திலிருந்து செலுத்தப்பட்டதாக, கடந்த காலங்களில் பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலையை ஆராயும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றவர்களின் விவரங்களை ஜனாதிபதி அலுவலகத்திடம் தயாசிறி கோரியிருந்தார். எனினும், அவ்விவரங்கள் கிடைக்காத காரணத்தால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆணையகத்தில் அவர் முறையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் வழங்கப்பட்டமை தொடர்பான ஆவணங்களை தேசிய மக்கள் சக்தியினர் தேடியபோது, மேலும் ஒரு எதிர்பாராத தகவல் வெளிச்சத்துக்கு வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவலின் படி, தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரான நிஹால் கலப்பத்தியின் மனைவி உள்ளிட்ட சிலரின் வைத்தியசாலைச் செலவுகளுக்காக, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்த தகவல், அரசியல் அரங்கில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன், 76 வருட சாபம் என அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வந்த தரப்புகளே இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக விளக்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.