தெஹிவளை மரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் மரணம்
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரைன் ட்ரைவ் (கடற்கரை வீதி) பகுதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் நேற்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் களுபோவில பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய, குறித்த உணவகத்தின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு உணவகத்தில் இருவர் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், அவர்களில் ஒருவர் திடீரென தனது கைத்துப்பாக்கியால் (Pistol) உணவக உரிமையாளரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த Sea Shark எனும் உணவகத்தின் உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.