வாய்ப்பு கிடைத்தால் புடினை கைது செய்வேன், பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர்
வாய்ப்பு கிடைத்தால் புடினை கைது செய்வேன், உக்ரைனில் இருந்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளரின் அதிரடி அறிவிப்பு உக்ரைனின் தலைநகர் கீவ் நகருக்குச் செய்துள்ள விஜயத்தின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சட்டத்தின் முன் நிறுத்தத் தயார் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். தனக்கு உலகத் தலைவரை கைது செய்யும் வாய்ப்பு கிடைத்தால், அது புடினாகவே இருக்கும் என்றும், அவரை போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறச் செய்வேன் என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தினார்.
ரஷ்யா மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டிய ஹீலி, புச்சா பகுதியில் தான் நேரில் கண்ட கொடூர காட்சிகளையும், இர்பின் பகுதியில் உக்ரைனிய சிறுவர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார். கீவ் நகரில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு ஒன்றை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் எவ்வாறு திட்டமிட்டு இலக்காக்கப்படுகின்றன என்பதே இதன் சான்று என்றார்.இவர் நிறுத்தப்பட வேண்டிய நபர். இது நிறுத்தப்பட வேண்டிய போர் எனக் கூறிய ஹீலி, உக்ரைனின் போராட்டத்திற்கு உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிலையில், புடினை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார். உக்ரைன் போரைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், அதற்காக கைது நடவடிக்கை அவசியமில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது, பிரித்தானியா,உக்ரைன் இடையிலான 100 ஆண்டுகால ஒத்துழைப்பிற்கான வீதி வரைபடத்தில் பாதுகாப்புச் செயலாளர் கையெழுத்திட்டதுடன், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளுக்காக 200 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.