6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் மீளாய்வு,2027ல் நடைமுறை
அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், முதலாம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டில் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.மேலும்,சர்ச்சைக்குரிய 6ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் கல்வி அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்த பின்னர், அதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபை ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், எதிர்கால கல்விச் சீர்திருத்தங்கள் மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வளர்ச்சி, நிர்வாகச் சீர்திருத்தம், மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள், பாடத்திட்ட மேம்பாடு ஆகிய ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஊக்குவிப்பும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.