ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ, பெப்ரவரி 03 அன்று நிதிக்குற்ற விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அவர் குறித்த பிரிவில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்
வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷவை ஆஜராகுமாறு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் ஆஜராக முடியாத நிலையில் இருப்பதாகவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் அவர் தனது சட்டத்தரணி மூலமாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். இருப்பினும், அதனை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், மீண்டும் பெப்ரவரி 03 ஆம் திகதி ஆஜராகுமாறு புதிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்
இதனுடன் இணையாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும், எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர் அப்போது நாட்டில் இல்லாத காரணத்தால் வேறொரு திகதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து தற்போது புதிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.