9 நாட்கள் போராட்டம் முடிவு, கரைவலை மீனவர்கள் சத்தியாக்கிரகத்தை கைவிட்டனர்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒன்பது நாட்களாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வந்த கரைவலை மீனவர்கள், நேற்று பிற்பகல் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.ஜனாதிபதி உடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மீனவர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கலந்துரையாடலில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கரைவலை மீன்பிடியில் உழவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, தீர்வு கோரி செயலகம் முன் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நடைமுறைசார்ந்த தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன், மீனவர்கள் தங்களது சத்தியாக்கிரகத்தை நிறுத்தியுள்ளனர். மேலதிக கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.