ஒலுவில் பகுதியில் நெல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து
அக்கரைப்பற்று,கல்முனை பிரதான வீதியின் ஒலுவில் பகுதியில் நேற்று காலை சுமார் 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலும்
குறித்த நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, அதனைத் தவிர்க்க முயன்ற டிப்பர் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட போது லொறியில் ஏற்றப்பட்டிருந்த நெல் மூட்டைகள் பெருமளவில் வீதியோரமாக சிதறின. இருப்பினும், வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி எந்தவித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும், இதனால் சாரதிகள் அதிக அவதானத்துடன் வாகனங்களை இயக்க வேண்டுமெனவும் போக்குவரத்துப் பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனம் அம்பாறை மடவலந்த பகுதியைச் சேர்ந்த தனியார் அரிசி ஆலை ஒன்றுக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.