வட மாகாண காணி விடுவிப்பு அரசின் புதிய நிலைப்பாடு
வட மாகாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் மற்றும் அரசின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகள் தேவைக்கேற்ப மீள வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார். மக்கள் தேவைகள் மற்றும் நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.மேலும், தற்போதைய அரசாங்கம் குறித்த காலவரையறைக்குள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த கால அரசுகளுடன் ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகளவிலான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறிப்பிடத்தக்கவை எனவும், நிதி மேலாண்மையில் செய்யப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் காரணமாகவே இவ்வாறு உதவிகளை வழங்க முடிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.புயலால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியமானதாக இருந்தது என்றும், ஒரே வீட்டையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் குடும்பங்களின் மனவேதனையை அரசு புரிந்துகொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.பல சொத்துகளைக் கொண்டிருப்போர் இவ்வாறான மக்களின் வாழ்வாதார சிரமங்களை முழுமையாக உணர முடியாது என்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.