பாடசாலைகளில் கட்டாய பண வசூலுக்கு இடமில்லை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து கட்டாயமாக பணம் வசூலிக்கும் நடைமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தில் எந்தவித இடமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விளக்கமளிக்கையில், பல ஆண்டுகளாக பாடசாலைகளில் பல்வேறு செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் வசதிகளுக்காக மாணவர்களிடமிருந்து தொகைகள் வசூலிக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டார். மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகைகள் நிர்ணயிக்கப்பட்டதோடு, இது பல இடங்களில் வழக்கமான நடைமுறையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ்,பாடசாலைகளில் கட்டாய பண வசூலுக்கு எந்த சட்டபூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பணம் கோருவதால் ஒரு மாணவர் மன உளைச்சல் அல்லது சிரமத்தை எதிர்கொண்டால், அதில் தலையிட்டு மாணவர்களின் நலனை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தன்னார்வ அடிப்படையில் பாடசாலைகளுக்கு உதவ விரும்பும் பெற்றோர் அல்லது சமூகக் குழுக்களின் பங்களிப்புகளைத் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார். அதாவது, கட்டாய வசூல் அனுமதிக்கப்படமாட்டாது, ஆனால் விருப்ப பங்களிப்புகள் ஏற்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை அமைச்சுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பாடசாலைகளில் ஸ்மார்ட்போர்டுகள் அறிமுகப்படுத்தப்படுவது கட்டாயமான ஒன்றல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளக வளங்களையும், நடைமுறை கற்றல் முறைகளையும் பயன்படுத்தி முன்னேற முடியும் என அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவது முக்கியமானது, அதற்காக தேவையற்ற நிதிசுமை ஏற்படுத்தப்படக் கூடாது என்பதே அரசின் நிலைப்பாடாகும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.