FCID விசாரணைகள் நிறைவு வெளியேறினார் ஷிரந்தி ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் பல விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று (03) காலை 9.30 மணியளவில் FCID அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், ஷிரந்தி ராஜபக்ஷ மேலும் இருவருடன் இணைந்து பராமரித்ததாக கூறப்படும் சிறிலிய(Siriliya) என்ற கூட்டு வங்கிக் கணக்கின் மூலம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் நிதி பரிவர்த்தனைகள் குறித்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கு முன்னர், கடந்த ஜனவரி 27ஆம் திகதியும் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் சமூகமளிக்க முடியாத காரணத்தினால் வேறு தினம் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்கி வெளியேறிய போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவான பெருமளவானோர் FCID அலுவலகத்திற்கு முன்பாக திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.