நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிப்பு,கடல் நிலை கொந்தளிப்பு
இன்றைய தினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனுடன், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை காலங்களில் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்கள் மற்றும் திடீர் பலத்த காற்றினால் உருவாகும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொத்துவில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றும்
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்து உள்ளது.காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசும் எனவும், அதன் வேகம் மணித்தியாலத்திற்கு 30–40 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில கடற்பரப்புகளில், குறிப்பாக கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 45–50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஏனைய பகுதிகளில் மிதமான கடல் நிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடியதால், கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் கடற்பயணிகள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.