ஜப்பான் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக சனே டக்காச்சி
ஜப்பானின் புதிய பிரதமராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சனே டக்காச்சி (Sanae Takaichi), குறுகிய காலத்திலேயே மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ளார். தற்போது அவருக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் அவரது ஆளும் கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மையே இருந்த நிலையில், தனது பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை தடையின்றி முன்னெடுக்கவும், அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவும் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய காலகட்டத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டின் நிர்வாகத்தை பாதிக்கக்கூடும் என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. எனினும், புதிய அரசு அமைந்தவுடன் உடனடியாக வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டக்காச்சி உறுதியளித்தார்.இதனைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தரவின் பேரில் ஜப்பானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர், பெப்ரவரி 08 அன்று நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஆளும் LDP (Liberal Democratic Party) கட்சி 465 ஆசனங்களில் 352 ஆசனங்களை கைப்பற்றி, பாராளுமன்றத்தில் உறுதியான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை சனே டக்காச்சி பெற்றுள்ளார்.அவரது அபார வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.