பங்களாதேஷில் நிபா வைரஸ் பெண் ஒருவர் உயிரிழப்பு-WHO உறுதி
பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த நோய் உலகளாவிய ரீதியில் பரவுவதற்கான அபாயம் குறைவாகவே இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் நவோகான் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு கடந்த ஜனவரி 21ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் தோன்றியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவரிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக WHO தெரிவித்துள்ளது.அந்த பெண் சமீப காலத்தில் வெளிநாடு அல்லது வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததற்கான தகவல்கள் எதுவும் இல்லை. எனினும், தொற்றுக்கான சாத்தியமான காரணமாக பச்சை பேரீச்சம்பழச் சாற்றை அவர் உட்கொண்டிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இம்மாதம் 3ஆம் திகதி பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக WHO ஏற்கனவே அறிவித்திருந்தது. குறித்த நோயாளியுடன் தொடர்பில் இருந்த 35 பேரை சோதனை செய்ததில், இதுவரை எவரிடமும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் சமீபத்தில் இரண்டு நபர்கள் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பங்களாதேஷில் இந்த மரணம் இடம்பெற்றமை பிராந்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக சில அண்டை நாடுகளின் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இருப்பினும், பயணங்கள் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. உள்நாட்டிலும் உலகளாவிய அளவிலும் நிபா வைரஸால் ஏற்படும் அபாய நிலை தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக WHO தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் 2001ஆம் ஆண்டு முதல் இதுவரை 348 நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.இத்தொற்றாளர்களில் சுமார் பாதியளவு பேர் பேரீச்சம்பழச் சாற்றை உட்கொண்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் நிபா வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசி அல்லது உறுதியான சிகிச்சை முறைகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில், இந்த நோயின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது சுகாதாரத் துறையினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது.