அமெரிக்க நீதித்துறை ஆவணங்களில் எப்ஸ்டீன் குறித்த புதிய குற்றச்சாட்டுகள்
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ள ஆவணங்கள், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் அமெரிக்க உளவு அமைப்புகளிடம் தகவல்களை கோரியிருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.இந்த ஆவணங்களின்படி, CIA மற்றும் NSA உள்ளிட்ட உளவு அமைப்புகளுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து எப்ஸ்டீனின் சட்டத்தரணிகள் தகவல் கோரியுள்ளனர்.2019 ஆம் ஆண்டு, பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்காகக் காத்திருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த எப்ஸ்டீன் தொடர்பான கூட்டாட்சி புலனாய்வு ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற சட்டத் தேவையின் கீழ் இந்த விவரங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இன்று திங்கள்கிழமை (09) செய்தி வெளியிட்டுள்ளது.2011 ஜூலை 29 ஆம் தேதியிட்ட கடிதத்தில், 1999 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் எப்ஸ்டீனுக்கும் CIA அமைப்புக்கும் இடையில் வெளிப்படையான எந்தத் தொடர்பும் இல்லை என அந்த அமைப்பு அவரது வழக்கறிஞருக்கு தெரிவித்துள்ளது.ஆனால், ரகசிய தகவல்கள் தொடர்பான பதிவுகள் உள்ளனவா என்ற கேள்விக்கு, தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, அவை இருப்பதை “உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது” என CIA பதிலளித்துள்ளது.அதேபோல், 2014 ஆம் ஆண்டில் NSA அமைப்பு, எப்ஸ்டீனின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ளதாகவும், இத்தகைய பதிவுகள் இருப்பதை ஒப்புக்கொள்வது உளவு செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் வெளியிடப்பட்ட நீதித்துறை ஆவணங்களில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலும் இடம்பெற்றுள்ளது.
ஒரு ரகசிய FBI தகவல் தொடர்பாளர், எப்ஸ்டீன் ஒரு இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) உடன் தொடர்புடையவர் என நம்பியதாக அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், எப்ஸ்டீன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுக்குச் சொந்தமானவர் என, அவரது வழக்கறிஞர் ஆலன் டெர்ஷோவிட்ஸ் அப்போதைய அரசு வழக்கறிஞர் அலெக்ஸ் அகோஸ்டாவிடம் தெரிவித்ததாகவும் அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், எப்ஸ்டீன் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் பராக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவரிடமிருந்து உளவுத் துறையுடன் தொடர்புடைய பயிற்சிகளைப் பெற்றதாகவும் அந்த ரகசிய தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.